Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

மங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி தலைவர், உறுப்பினர்கள் சாலை மறியல்

மங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, திருப்பூர் மாவட்டம் மங்கலம் - ஆண்டிப்பாளையம் செல்லும் பிரதான சாலையிலுள்ள அரசுப் பள்ளி அருகே காலிக் குடங்களுடன் மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "மங்கலம் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய குடிநீரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்சரியான முறையில் வழங்க வேண்டும்,சுல்தான்பேட்டை முதல் ஆண்டிப்பாளையம் வரை தார் சாலை அமைத்து தர வேண்டும்,

பல்லடம் குற்றப்பாறை கோயில் அருகில் இருந்து சத்யா நகர் செல்லும் சாலையை அளவீடு செய்து தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு மங்கலம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x