Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு பெண் உட்பட இருவருக்கு தொடர் சிகிச்சை

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி பாலன் (42), கலைவாணி (37). இருவரும், நேற்று காலை தாராபுரத்திலிருந்து ஈரோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

காங்கயம் காவல் எல்லைக்கு உட்பட்ட தாராபுரம் - காங்கயம் சாலையில், இவர்களின் வாகனத்துக்கு பின்னால் தேனியிலிருந்து மாட்டுத் தீவனம் ஏற்றிக்கொண்டு லாரியும் வந்துள்ளது.

அங்குள்ள தனியார் பெட்ரோல் விற்பனை மையம் அருகே, காங்கயத்திலிருந்து தாராபுரம் மார்க்கமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலன், கலைவாணி தம்பதி சென்ற வாகனம், மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

காரில் வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சி.மோகன்னா ஜி (29),யு.ஹாலேஷ் (38), ஏ.பரமேஷ் (42), காரை ஓட்டி வந்த அப்சல் அலி (22) மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற பாலன், கலைவாணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இவர்களை காங்கயம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் மீட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மீட்புப் பணியின் போதுமோகன்னாஜி உயிரிழந்தார். காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்தடுத்த சில மணி நேரங்களில் ஹாலேஷ், பாலன், பரமேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். கலைவாணி, அப்சல் அலி ஆகியோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். காங்கயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "காரில் வந்த 4 பேரும், கர்நாடகா மாநிலத்திலிருந்து தேனிக்கு சோளம் அடிக்கும் இயந்திரம் வாங்க சென்றுள்ளனர். அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x