Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

புனித சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றம் :

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் புனித சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இப்பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் திருவிழா நிகழ்ச்சிகள் விமரிசையாக நடத்தப் படவில்லை. இவ்வாண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஆ. ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றமும், இதை தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது. செக்கரியா மண்டல இறைமக்கள் முதல் நாள் விழாவை சிறப்பித்தனர்.

இத் திருவிழா வரும் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் திருப்பலிகள் நடைபெறுகின்றன. வரும் 28-ம் தேதி காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் திருப்பலி நடைபெறுகிறது. வரும் 2-ம் தேதி மண்ணின் மைந்தர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி திருப்பலிக்குப்பின் புனிதரின் சப்பரபவனி நடைபெறுகிறது. விழாவின் 10-ம் நாளான வரும் 3-ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ். அந்தோனிசாமி தலைமை வகிக்கிறார். இத் திருப்பலியில் சிறுவர், சிறுமியருக்கு முதல் நற்கருணை அருட்சாதனம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 6 மணி திருப்பலிக்குப்பின் கொடி யிறக்கம் நடைபெறுகிறது. வரும் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் உறுதி பூசுதல் அருட்சாதனம் ஆயரால் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை ராஜேஸ், உதவி பங்குத்தந்தையர் தயாளன், அந்தோனிராஜா செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x