Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் - 66 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு :

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர் மழை பெய்து வருவதாலும் கீழணைக்கு விநாடிக்கு 66 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் 8 அடி மட்டுமே தண்ணீர் தேக்க முடியும் என்பதால் கீழணையில் இருந்து விநாடிக்கு 66 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கீழணையில் இருந்து வடவாறு மற்றும் குமுக்கிமண்ணியாறு உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களில் தண்ணீர் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் வழியாக விநாடிக்கு 240 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 4.20 அடி கொள்ளளவு உள்ள பெருமாள் ஏரியில் இருந்து விநாடிக்கு 941 கன அடி தண்ணீர் வடிகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், கீழணை அருணகிரி மற்றும் உதவிப் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடம் ஆற்றின் கரை, வீராணம் ஏரியின் கரை, பெருமாள் ஏரி கரை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x