Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM

தொடர் மழையால் முளைத்து வீணான நெல் மூட்டைகள் : வடகரை கொள்முதல் நிலையத்தில் அவலம்

வடகரை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் ஏராள மான நெல் மூட்டைகளில் நெல் மணிகள் முளைத்து வீணாகின.

தென்காசி மாவட்டம், வடகரையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மேலும், விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளும் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் தொடர்ந்து நனைந்தன. இதனால், நெல் மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகிவிட்டன. சுமார் ஆயிரம் மூட்டைகளில் நெல்மணிகள் முளைத்துவிட்டதாகக் கூறப்படு கிறது.

அதிகாரிகளிடம் கேட்டபோது, “மழையில் நனைந்த நெல் மூட்டைகளால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. நனைந்த நெல் மூட்டைகளை உடனடி யாக அரிசி ஆலைக்கு அரவை க்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டது” என்றனர்.

விவசாயிகள் கூறும் போது, “தொடர் மழையால் விற்பனைக் காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிவிட்டன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள் ளனர். மீண்டும் வெயில் அடித்தால்தான் நெல்லை உலர வைக்க முடியும். தொடர்ந்து மழை பெய்தால் நெல்லை உலர வைக்க முடியாது.

நெல் ஈரப்பதமாக, முளைத்து இருந்தால் கொள்முதல் செய்யமாட்டார்கள். நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் விவசாயிகளுக்கு இழப்பு மற்றும் வேலைச் சுமை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x