Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

தொடர் மழையால் கீழணையில் இருந்து - கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு :

கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வரும் நிலையில், கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கீழணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு விநாடிக்கு 4ஆயிரம் கன அடி மழை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் 9 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும். கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வடவாற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இது போலவே வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் தற்போது 45.10 அடி தண்ணீர் உள்ளது. மழை தண்ணீர் வினாடிக்கு 500 கன அடி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 61 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழணையில் 8.5 அடி வரை தண்ணீரை தேங்கி வைக்கப்பட்டு உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

“வெள்ள தடுப்பு நடவடிக்கையாக வீராணம் ஏரியின் நீர் மட்டத்தின் கொள்ளளவு குறைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கரைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கீழணையின் உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளின் ஓரமாக உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்” என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x