Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் - தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம், கண்மாய்கள் : சுற்றுலாத் தலமான புல்வெட்டி கண்மாய்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 336 ஏக்கர் பரப்புள்ள புல்வெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப்பருவமழை தொடங் கியது முதல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்ட நிலையில், அணையில் இருந்து கண்மாய், குளங்களுக்கு நீர் திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் குளம், கண்மாய்கள் ஒவ்வொன் றாக நிரம்பி வருகின்றன.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி பகுதிகளில் பெய்த மழையால் ஆத்தூர் நீர்த் தேக்கம் நிரம்பி வழிகிறது.

இதில் இருந்து வெளியேறும் உபரி நீர் நடுங்குளம், கருங் குளத்தை நிரப்பிவிட்டு செம்பட்டி அருகேயுள்ள புல்வெட்டி கண்மாயை நிரப்பி மறுகால் பாய்கிறது. புல்வெட்டி கண்மாய் 336 ஏக்கர் பரப்பரளவு கொண்ட பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாய் நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகிழக்குப்பருவமழை தொடங்கிய நிலையிலேயே கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயத்துக்கும், குடி நீருக்கும் பிரச்சினை இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

புல்வெட்டி கண்மாய் நிரம்பி யதைக் காண சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் திரளாக வந்து கண்மாயில் குளித்து மகிழ் கின்றனர்.

இதனால் புதிய சுற்றுலாத் தலமாக புல்வெட்டி கண்மாய் உருவாகி உள்ளது. புல்வெட்டி கண்மாய் மறுகால் பாய்வதால் அடுத்தடுத்து உள்ள குளம், கண்மாய்களுக்கு நீர் சென்று படிப் படியாக அடுத்தடுத்து இருக்கும் குளங்களும் நிரம்பி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x