Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை :

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலையில் இடியுடன் மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்குமுன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாபநாசம் அணை உள்ளிட்ட அணைகளில் இருந்து கணிசமான அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருந்தது. நேற்று காலையிலிருந்து நண்பகல் வரையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் வள்ளியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் இடியுடன் மழை பெய்தது. பாளையங்கோட்டையில் மாலையில் பெய்த திடீர் மழையால் கல்லூரி, பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர்.

பாபநாசம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 1,617 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,718 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்):

பாபநாசம்- 138.30 அடி (143 அடி), சேர்வலாறு- 144.72 (156), மணிமுத்தாறு- 77.30 (118), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.36 (22.96), கொடுமுடியாறு- 50.50 (52.25).

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்தது. இந்நிலையில், நேற்று காலையில் வெயில் அதிகமாக இருந்தது. மதியம் வானில் மேகம் திரண்டு மழை பெய்தது. சுரண்டை, தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x