Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் - தபால் வாக்குகள் பட்டியலை சரிபார்த்து அனுப்ப வேண்டும் : ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு

வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தபால் வாக்குகள் பட்டியலை முறையாக சரிபார்த்து அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடை பெற உள்ள நிலையில் முதற் கட்ட தேர்தல் நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை தயார் செய்யும் பணி தொடங்கி யுள்ளன. அதன்படி, வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

வாலாஜா ஒன்றியத்தில் 297 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 36 ஊராட்சிமன்ற தலைவர், 20 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, 240 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தியுள்ளனர். தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், தபால் வாக்குகள் அளிக்க உள்ளவர்களின் விவரங்களை சரியாக ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய வாக்குச் சீட்டுகளை அனுப்ப வேண்டும் என்றும் தபால் வாக்குகள் அனைத்தும் வரும் 12-ம் தேதி காலை 8 மணிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பெட்டியில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ள வாக்குப்பெட்டிகள் மற்றும் மையங்களில் பயன்படுத்தப்படும் 72 வகையான பொருட்கள் அடங்கிய பைகள் சரியாக உள்ளதா? என்பதையும் அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்ட றிந்தார். தேர்தலுக்கு முன்தினம் இந்த பொருட்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x