Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - திருச்சியில் 2, கரூரில் 3 வேட்பு மனுக்கள் தள்ளுபடி :

திருச்சி/ அரியலூர்/ திருவாரூர்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் திருச்சி மாவட்டத்தில் 2 மனுக்களும், கரூர் மாவட்டத்தில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 27 மனுக்களும், 2 ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு 8 வேட்புமனுக்களும், 19 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 39 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்ற நிலையில், வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்களில் ஒரு மனுவும், துறையூர் ஒன்றியம் 13-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களில் ஒரு மனுவும் என 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 72 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் 15 உள்ளாட்சி பதவிகளுக்கு 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 1, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 என 3 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 62 மனுக்கள் ஏற்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 16 பேரும், 13 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 40 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சித் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட ஒரு வேட்பு மனுவும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களும் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் ஏற்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்தில் 32 பதவி இடங்களுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 111 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x