Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி :

வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. வீராணம் ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடந்தது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வடிகட்டப்பட்டது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு அது கீழணைக்கு வந்து சேர்ந்தது. கடந்த ஒரு மாதமாக கீழ்அணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று விநாடிக்கு 1,237 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 43.10 அடியாக உள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 22 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் ஒரு வாரத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x