Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாளையொட்டி, வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர். அடுத்த படம்: அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர். கடைசிப்படம்: விஐடி பல்கலைக் கழகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சார்ஆட்சியர் வந்தனாகர்க் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் உருவ சிலைக்கு விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல, அதிமுக, திமுக, அமமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணாவின் நினைவு தினத்தை நேற்று அனுசரித்தனர்.

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் மாநகர திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்துக்கு வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு, மாநகர அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்ற திமுகவினர் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், அவைத் தலைவர் முகமதுசகி, முன்னாள்அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன், ஒன்றியச்செயலாளர் ஞானசேக ரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

அதேபோல, அதிமுக சார்பில் வேலூர் மாநகர மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அதிமுகவினர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் மற்றும் வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி, பகுதி செயலாளர் குப்புசாமி, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி எல்.கே.எம்.பி.வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக சார்பில் அண்ணாவின் சிலைக்கு அந்தந்த கட்சி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x