Published : 18 Dec 2020 03:18 AM
Last Updated : 18 Dec 2020 03:18 AM

ரயில் மறியலில் ஈடுபட்ட மமகவினர் 142 பேர் கைது

திருச்சி

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 142 பேரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் உதுமான் அலி தலைமையில் ரயில் நிலையத்தின் முன்புற நுழைவுவாயில் பகுதிக்கு வந்தவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர் வேறொரு வழியாக கோரிக்கைகளை முழக்கமிட்டவாறு ரயில் நிலையத்துக்குள் புகுந்தனர். அந்தநேரத்தில் வந்த மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சிறப்பு ரயிலை தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். இதனால், ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x