Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM
நீண்ட காலத்துக்குப்பின் நவ.1-ம்தேதி பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உற்சாகம், நம்பிக்கையுடன் வரவேற்பு கொடுப்போம் என்று நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கரோனா பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்துமெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அனைத்திலும் குறிப்பாக, வரும் நவ.1-ம் தேதி பள்ளிகளில் 1 முதல்8 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பள்ளிகளை நோக்கி துள்ளிவரும் பிள்ளைகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இருண்ட கரோனா காலம் முடிந்துஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவ, மாணவியர் அனைவரும் தொடங்க உள்ளீர்கள். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் கல்விச் சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்று முதல் 8 வரையிலான வகுப்புகளில் கிட்டத்தட்ட 600 நாட்களுக்கும் மேலாக பிள்ளைகள் பள்ளிக்குள் வர இயலாத சூழல் இருந்தது. கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து கல்விச்சாலைகளின் கதவுகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. இந்த உன்னதமான சேவைக்கும் உழைப்புக்கும் காரணமான அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக நீண்ட நாட்களுக்குப்பின் பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும். கல்விச்சாலைகளின் கதவுகளை நோக்கி வரும்மாணவர்களை வரவேற்க நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப் போல் வரவேற்பு கொடுங்கள்.
ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமான பள்ளியாக இருந்தாலும் ஒரு பெரும் நெருக்கடிக்குப் பின் அந்த பிள்ளைகள் வருகின்றனர். கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், கரோனா குறித்த பயம் மக்கள் மனதில் இருக்கிறது. அதுவும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அதிகம் இருக்கிறது. ஒருவிதமான பரிதவிப்புடன் வரும் பிள்ளைகளின் பயம் போக்கி அரவணைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
கரோனா விதிமுறைளைப் பின்பற்றி வரவேற்பு கொடுங்கள். இனிப்புகளை வழங்குங்கள்; மலர் கொத்துகளையும் வழங்கலாம். எதை வழங்கினாலும் அத்துடன் அன்பையும்அரவணைப்பையும் நம்பிக்கையையும் சேர்த்து வழங்குங்கள். முதல்2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையூட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பள்ளி சார்ந்தகற்றலில் குழந்தைகள் ஈடுபட முடியாததால், அந்தந்த வகுப்புக்குரிய திறன்களை முழுமையாக அடையமுடியாத நிலை இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அதற்கான புத்தாக்கப் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
என் அன்பார்ந்த வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் பள்ளிக்கு வரும் நாளை இனிய நாளாகமாற்றுங்கள். பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நேசமுடன் கண்போல போற்றுங்கள். மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலம்மாணவர்களை மீண்டும் உற்சாகப்படுத்துவோம். அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலம் எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம்.
இதன்மூலம் மாணவர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்ல; நமக்கும் நமது பள்ளிக்கால உற்சாகத்தைப் பெறலாம். அனைவரும் சேர்ந்து குழந்தைகளை கொண்டாடுவோம்.
இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT