Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM

விண்வெளி துறை மூலம் - 130 கோடி இந்தியர்களும் முன்னேறுவர் : இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி

விண்வெளி துறையின் மூலம் 130 கோடி இந்தியர்களும் முன்னேறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் இன்று இருப்பதுபோல தீர்க்கமான அரசு ஒருபோதும் இருந்ததில்லை. விண்வெளித் துறையிலும், விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் மாற்றங்களே இதற்கு உதாரண மாகும். இன்று இந்திய விண்வெளி சங்கம் (இஸ்பா) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன்.

விண்வெளி துறையின் மூலம் 130 கோடி இந்தியர்களும் முன்னேறுவார்கள். குறிப்பாக விண்வெளித் துறை மூலம் சமானிய மக்கள் பயன் பெறும்வகையில் மிகச் சிறந்த புவியியல்வரைபடங்கள் தயாரிக்கப்படு கின்றன. தொலைத் தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அவர்களின் வருவாய் அதிகரிக்கிறது. இயற்கை சீற்றங்கள் குறித்து முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் தெளிவானது. அரசுக்கு தேவைப்படாத துறைகள் தனியாருக்கு திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா தொடர்பான முடிவு நமது உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தின் பயனால் கடந்த 7 ஆண்டுகளாக கடைகோடி மக்களுக்கும் அரசின்திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறது. ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

விரைவில் விண்வெளி கொள்கை

பல்வேறு துறைகளில் ஆளில்லா விமானங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் சிறந்த விண்வெளிக் கொள்கையும், தொலையுணர்வு கொள்கையும் உருவாக்கப்படும். சர்வதேச அளவில் செயற்கைக்கோள் ஏவும் மையமாகவும், விண்வெளி துறைக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் மையமாகவும் இந்தியா உருவெடுக்கும்.

பாலமாக விளங்கும்..

21-ம் நூற்றாண்டில் உல கத்தை ஒன்றிணைப்பதிலும், இணைப்பதிலும் விண்வெளி துறை பாலமாக விளங்கும். இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்திய விண்வெளி சங்கத்தில் எல் அன்ட் டி, நெல்கோ (டாடா), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மை இந்தியா, வால்சந்த்நகர் இன்டஸ்ட்ரீஸ், ஆனந்த் டெக் னாலஜி லிமிடெட், கோத்ரெஜ், அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இண்டியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x