Published : 04 Jun 2014 03:11 PM
Last Updated : 04 Jun 2014 03:11 PM

ஃபேஸ்புக்கில் பெற்றோர் ஒப்புதலுடன் வலம் வர சிறுவர்களுக்கு அனுமதி

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் ஒப்புதலுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது. அதன்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் ஃபேஸ்புக் கணக்கை தங்களது பெற்றோரின் ஒப்புதலுடன் பெறலாம்.

இதற்காக ஃபேஸ்புக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. 13 வயதுக்கு உட்பட்ட பயனர்கள் தனது கணக்கை துவக்க முயற்சித்தால், அந்தப் பயனரிடம் அவர்களது பெற்றோர் வைத்திருக்கும் கணக்கு குறித்த தகவல்களை ஃபேஸ்புக் கேட்கும்.

அதன்பின், பெற்றோரின் கணக்கின் மூலம் ஒப்புதல் அளிக்கும்படியாக மின்னஞ்சல் அனுப்பப்படும். பயனருடைய வயது, பெற்றோர் விவரம் ஆகிய விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின், ஃபேஸ்புக் கணக்கை துவங்கிவிடலாம். பெற்றோரின் கணக்கு மூலம் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.

பின்னர், இளம் பயயருடைய கணக்கு, அவரது பெற்றோரின் கணக்குடன் இணைக்கப்படும். இதன்மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் ஃபேஸ்புக் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் பதிவேற்றம் செய்யும் தகவல்களும் வந்து சேரும்.

இதன் மூலம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் சிறார்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாவதாக, கடந்த ஆண்டு கடுமையான விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x