Published : 19 Jun 2023 04:22 PM
Last Updated : 19 Jun 2023 04:22 PM

ஸ்மார்ட்போன் பயனர்களின் தரவுகளை திரட்டுவதாக புகார் - ரியல்மி பதில் என்ன?

கோப்புப்படம்

சென்னை: ரியல்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அந்நிறுவனம் திரட்டி வருவதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கென பிரத்தியேக அம்சம் ஒன்றை ரியல்மி பயன்படுத்தி வருவதாக சொல்லி, அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அது தொடர்பாக ரியல்மி எதிர்வினை ஆற்றி உள்ளது.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. அண்மையில் ரியல்மி 11 புரோ 5ஜி சீரிஸ் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது அந்நிறுவனம். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு அந்நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.

‘Enhanced Intelligent Services’ என்ற அம்சம்தான் ரியல்மி குற்றச்சாட்டுக்கு ஆளாக காரணமாக அமைந்துள்ளது. இந்த அம்சம் ரியல்மி யூஐ 4.0 வெர்ஷனில் எனேபிள் செய்யப்பட்டுள்ளதாம். இந்த அம்சம் பயனர்கள் தங்கள் சாதனத்தை (மொபைல்) எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் சாதனத்தின் இயக்கத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.

இதன் விரிவாக்கத்தில் மொபைல் சாதனம் குறித்த தகவல், பயனார்களில் செயலிகள் பயன்பாடு குறித்து விவரங்கள், காலண்டர் ஈவெண்டுகள், பயனர்கள் பார்க்காமல் உள்ள குறுஞ்செய்தி மற்றும் தவறவிட்ட அழைப்புகள் (மிஸ்டு கால்) போன்ற விவரங்களை இந்த அம்சம் சேகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கான பர்மிஷனை பயனர்கள் தர வேண்டுமா அல்லது ரியல்மி தரப்பில் தானாகவே சேகரிக்கப்படுகிறதா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதை குறிப்பிட்டு தான் அந்த ட்விட்டர் பயனர், ரியல்மி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அந்த ட்வீட்டை மேற்கோள் காட்டிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இது குறித்து சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

ரியாக்ட் செய்த ரியல்மி: பயனர்களின் பிரைவசி மற்றும் செக்யூரிட்டிக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். சிறந்த பேட்டரி லைஃப் மற்றும் போனின் டெம்பரேச்சர் செயல்திறனை சார்ந்து தான் Enhanced Intelligent Services இயங்கி வருகிறது. இதை நாங்கள் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி பயனர்களின் எஸ்எம்எஸ், அழைப்புகள் மற்றும் காலண்டர் விவரம் சார்ந்த தரவுகளை நாங்கள் சேகரிக்கவில்லை என ரியல்மி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x