Published : 02 Jun 2023 12:59 AM
Last Updated : 02 Jun 2023 12:59 AM

சிங்கப்பூர், ஜப்பானில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் யாருக்கானது? - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கோயிலில் இருந்த சிவனடியாரிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆசி பெற்றார். படம் - இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: சிங்கப்பூர், ஜப்பானில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்களுக்கானதா? அல்லது மக்களுக்கானதா என பொருத்திருந்து பார்ப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று (ஜுன் 1-ம் தேதி) மாலை சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடக மாநிலத்தில் மேகேதாட்டு அணை கட்டுவது என்ற நிலைபாடு, கடந்த பாஜக ஆட்சியிலும் எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்த காங்கிரசும், அதே நிலைபாட்டை எடுத்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது யார்?. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தடை ஆணையை பெற வேண்டும்.

யார் எதிர்த்தாலும் மேகேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி என அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரவித்துள்ளார். ஏற்கெனவே, தமிழகம் பாலைவனமாக இருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். உறுதியான நடவடிக்கை எடுத்து, மேகேதாட்டுவில் அணை வராமல் தடுத்து, தமிழகத்தை காக்க வேண்டியது தமிழக முதல்வர் பொறுப்பு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே துபாய் சென்று வந்துள்ளார். இப்போது சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பி உள்ளார். தமிழகம் திரும்பியதும், வெற்றி பயணம் என்று கூறுகிறார். ஒரு திரைப்படம் வெளிவந்ததும், முதல் நாளே மாபெரும் வெற்றி படம் என விளம்பரம் வெளியிடுவதுபோல் உள்ளது அவரது அறிவிப்பு. ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை தொழிற்சாலைகள் வருகிறது, எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களுக்கானதா? அல்லது மக்களுக்கானதா? என பொருத்திருத்து பார்ப்போம். சொல்லியதை செய்யவில்லை என்றால், கேள்வி கேட்போம்.

38, 39 எம்பிக்கள் இருந்து என்ன பயன்?: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ளது. தேமுதிக தனது பணிகளை செய்து வருகிறது. செயற்குழு, பொதுக்குழு கூட போகிறது. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து மண்டல மாநாடுகள் நடத்தப்படும். அதன்பிறகு, யாருடன் கூட்டணி என அதிகாரபூர்வமாக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுன் வியூகம் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த தேர்தல் வந்தாலும் மக்களுக்கும், நாட்டுக்கும் பயன் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இப்போது திமுகவைச் சேர்ந்த 38 பேரும், இதற்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் எந்த பலனும் இல்லை.

மத்தியில் ஆட்சியில் பங்கேற்று, கேபினட் அமைச்சராக இருந்தால் மட்டுமே, தமிழகத்துக்கு தேவையானதை கேட்டு பெற முடியும். இதனை மக்கள் புரிந்துகொண்டு மாற்றத்தை கொடுத்தால், தமிழகத்துக்கு வேண்டியதை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற முடியும். யார்? ஆட்சி அமைக்க போகிறார்கள் என தெரியவில்லை. இந்தமுறை, தமிழகத்துக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறித்து, அந்நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. இதுவரை நாம் பார்க்காத தமிழகத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். கள்ளச்சாராயம், படுகொலைகள், நகை பறிப்பு, பாலியல் வன்கொடுமை ஒருபுறம் இருக்க, சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. சோதனையிட சென்றவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.

சோதனை நடத்த வருபவர்கள், எந்த காலத்தில் தகவல் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். தகவல் கொடுக்காமல் வருவதற்கு பெயர்தான் ரெய்டு. புது விளக்கத்தை காவல்துறையினர் கூறுகின்றனர். அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடியது. அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடமையை செய்யும் அதிகாரிகளை தாக்கக்கூடாது. மணல் கடத்தலை தடுத்த விஏஓ படுகொலை, துறையூரில் வட்டாட்சியர் மீது தாக்குதல் என்பதுதான் திராவிட மாடல் அரசு. கடமையை செய்யவிடாமல் அதிகாரிகளை அரசு தடுக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரரை கைது செய்ய வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. பேசுவதிலும், நடப்பதிலும் தடுமாற்றம் உள்ளது. மக்களையும், தொண்டர்களையும் விரைவாக சந்திப்பார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x