Last Updated : 01 Jun, 2023 10:09 PM

 

Published : 01 Jun 2023 10:09 PM
Last Updated : 01 Jun 2023 10:09 PM

கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஒப்பந்ததாரர் கைது

கோவை அருகே சரிந்து விழுந்த பிரமாண்ட விளம்பர பேனர் பொருத்தும் சாரம்

கோவை: கோவை அருகே, கருமத்தம்பட்டியில், ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே, கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு, ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பார்க்கும் வகையில் பிரமாண்ட விளம்பர பேனர் பொருத்தும் பணிகள் இன்று (ஜூன் 1) மேற்கொள்ளப்பட்டன. சேலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிசாமி என்பவரது தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றன. சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த 7 தொழிலாளர்கள் இன்று மாலை இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள், அங்கு ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த விளம்பரத்தை அகற்றிவிட்டு, புதிய விளம்பர பேனரை பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதுடன், மிதமான மழையும் பெய்து வந்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், விளம்பர பேனர் பொருத்தவிருந்த இரும்பு சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கினர். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள், கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் இணைந்து, சாரத்தை அப்புறப்படுத்தி அடியில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். சாரத்தின் மீது இருந்து கீழே விழுந்தவர்கள் மீது சாரம் விழுந்து அழுத்தியதால் மூன்று பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையி்ல் உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த குமார்(40), குணசேகரன்(52), சேகர்(45) ஆகியோர் என தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தாரர் பழனிசாமி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதும், அடித்தளம் பகுதி முறையாக பராமரிக்கப்படாததுமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம்,’’ என்றனர். இச்சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஒப்பந்ததாரர் கைது: இந்த விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஒப்பந்ததாரர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x