Last Updated : 01 Jun, 2023 01:34 PM

2  

Published : 01 Jun 2023 01:34 PM
Last Updated : 01 Jun 2023 01:34 PM

மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை, தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரி உட்பட 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகியுள்ளது என துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி ஜிப்மரில் ரோபாட் துணையுடன் 1,300 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இதையடுத்து ஜிப்மருக்கு சென்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை, அறுவை சிசிக்சை டாக்டர்களை இன்று கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து டாக்டர்கள் மத்தியில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: "ரோபாட் துணையுடன் அறுவை சிகிச்சை முதலில் வெளிநாடுகளில் செய்யப்பட்டு வந்தது. தென்னிந்தியாவில் அதிகளவு ரோபாட் மூலம் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவமனையாக ஜிப்மர் உள்ளது. சரியாக என்ன செய்ய வேண்டுமோ, தவறில்லாமல் நேரடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். குறைவான கீறல்போதும். ரத்தம் வீணாவது மிகக் குறைந்த நாள் மருத்துவமனையில் இருந்தால் போதும்.

விரைவில் சாதாரண வார்டுக்கோ, வீட்டுக்கோ திரும்பலாம். சாதாரண வாழ்க்கை முறைக்கு எளிதில் திரும்ப முடியும்.இதற்கான சாதனங்களுக்காக ரூ. 26 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 1300 பேருக்கு ரோபாடிக் சர்ஜரி நடந்துள்ளது. உயரிய சிகிச்சை செய்தாலும் தேடி வரும் மக்கள் மகிழ்வுடன், திருப்தியுடன் இருக்கும் வகையில் ஜிப்மர் நிர்வாக நடவடிக்கை இருப்பது அவசியம். " என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜிப்மரில் 8 துறைகளில் 20 டாக்டர்கள் ரோபாட் துணையுடன் அறுவை சிகிச்சை செய்கின்றனர். சிறுநீரகவியல், புற்றுநோய் பிரிவுகளில் அதிக அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. ஜிப்மரில் மக்கள் மருந்தகத்துக்கு வரும் ஜூன் 12-ல் டெண்டர் திறக்கப்படவுள்ளது. தமிழ் தெரிந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்." என்றார்.

மக்களுக்கான ஆம்புலன்ஸ் எப்போது இயக்கப்படும் என்று கேட்டதற்கு, "நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்களுக்கு எங்கேயும் கிடைக்காத சிகிச்சைகள் இங்கு கிடைப்பதை பதிவு செய்ய வேண்டும். " என்றார்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்தில் தமிழ் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளது பற்றி கேட்டதற்கு, "நம் மொழி எப்போதும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எண்ணம். தமிழுக்கு பிரதான முக்கியத்துவம் தந்துவிட்டுதான் பாடத்திட்ட மாற்றத்துக்கு ஒப்புக் கொண்டோம். மத்திய அரசிடம் இதை தெரிவித்துள்ளோம். தமிழ் எப்போதும் சிபிஎஸ்இ-யில் இருக்கும். சிபிஎஸ்இ கூடாது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.

தமிழகத்தில் தமிழ் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறாமல் உள்ளதையும் பார்க்க வேண்டும். கல்வியில் மக்கள் மேம்பட வேண்டும். புதுச்சேரி கல்வி புரட்சியை பார்க்க உள்ளது. உலக அரங்கில் சிறந்த கல்வியைப் பெற்று மிகப்பெரிய பலனை குழந்தைகள் பெறப் போகிறார்கள். மத்திய அரசு கட்டுப்பாட்டுகளை தளர்த்தி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளோம். சிபிஎஸ்இ-யில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழும், மாஹேயில் மலையாளமும், ஏனாமில் தெலுங்கும் இருக்கும். புதுச்சேரியில் தமிழ் இல்லாமல் இருக்காது. தமிழ் கட்டாயம் கொண்டுவரப்படும். " என்று தமிழிசை குறிப்பிட்டார்.

மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, "தமிழகத்தில் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தில் பாரபட்சம் செய்வதாக சொல்கிறார்கள். புதுச்சேரியில் என்ன ஆட்சி நடக்கிறது - இங்கும் அங்கீகாரம் ரத்தானது. உண்மையில் மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இல்லை புதுச்சேரியிலும் அங்கீகாரம் ரத்து நடந்துள்ளது. வருகைப் பதிவேடு மருத்துவர்களுக்கு சாதாரண விசயம் இல்லை.

அது பெரிய பிரச்சினை. புதுச்சேரியிலும் கட்டாயம் என்று சொல்லியுள்ளோம். நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளில் அங்கீகாரம் ரத்து செய்துள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரியிலும் ரத்து ஆகியுள்ளது. வருகைப் பதிவேடு முக்கியம். டாக்டர்கள் ஒழுங்காக வரவேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம்" என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x