Published : 29 May 2023 04:40 PM
Last Updated : 29 May 2023 04:40 PM

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானில் 6 நிறுவனங்களுடன் ரூ.818 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற முதல்வர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று (29.5.2023) காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு, ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் கேட்டு அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்:

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் (KyoKuto Satrac) நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 113 கோடியே 90 இலட்சம் ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை 155 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையே, கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் (extrusion lines for electronic components for use in construction industry) ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato-Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டஃப்ல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே, 150 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி (stainless steel specialized flexible hoses) செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x