Published : 27 May 2023 12:33 PM
Last Updated : 27 May 2023 12:33 PM

ட்விட்டர் வழியாக தினசரி 50 விதிமீறல் புகார்கள் பதிவு: சென்னை காவல்துறை தகவல் 

போக்குவரத்து காவல் துறை பதில்

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் ட்விட்டர் பக்கங்களின் வாயிலாக தினசரி 50 விதிமீறல் புகார்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக வலைதள செயலியை உபயோகப்படுத்துவதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காவல்துறையின் செயல்பாடுகள் சென்றடைவது எளிதாகியுள்ளது.

மேலும் சுமார் 16,000 நபர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையுடன் தொடர்பு கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது.

இவ்வாறு சமூக வலைதள செயலியை பயன்படுத்தும் சென்னை பெருநகர காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 1,35,927 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது “@chennaipolice” என்ற ஐடி மூலம் இயங்கி வருகிறது மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 75,271 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது “@ChennaiTraffic” என்ற ஐடி வாயிலாக இயங்கி வருகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் செயலியின் மூலம் சாலைப் பயனர்களுக்கு போக்குவரத்து ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் பிறருக்கு போக்குவரத்து மாற்றங்களைப் பற்றிய எச்சரிக்கை செய்திகளைத் தெரியப்படுத்துவதே முக்கியமான நோக்கம் ஆகும்.

சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் பின்புறம் இருக்கையில் பயணம் செய்பவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை இயக்குவது, தவறான வாகன எண் பலகை பொருத்துதல், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், சாலையில் போக்குவரத்து நிறுத்தற்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட ட்விட்டர் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நடவடிக்கையின் விவரங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்படுகின்றன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் ட்விட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு (97.8% அளவில்) நடவடிக்கை எடுக்கப்பட்டு மீதமுள்ளவை முன்னேற்றத்தில் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 50 விதிமீறல்கள் பதிவாகி ட்விட்டர் பக்கத்தில் பறிமாறப்படுகின்றன. இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ட்விட்டர் பக்கத்தின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்று வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறையினர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் சமூக ஊடக செயலியான ட்விட்டர் பக்கத்தை கையாளுதல்கள் மூலம் போக்குவரத்து பக்கத்தில் பொதுமக்களின் வரவேற்பை பெறுவதுடன் அவர்களின் பாராட்டையும் பெறுகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் நடத்தையை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன, இக்கேமராக்களின் சேவையானது போக்குவரத்து காவல் துறையினரின் "மூன்றாவது கண்" ஆக இருந்து வருகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக ஊடகத்தை "நான்காவது கண்" எனப் பயன்படுத்தி தொடர்ந்து விழிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் இருக்கும் குடிமக்களை தீவிரமாக கண்காணிக்க இந்த சமூக வலைதளம் பயன்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x