Last Updated : 26 May, 2023 03:46 PM

 

Published : 26 May 2023 03:46 PM
Last Updated : 26 May 2023 03:46 PM

மதுரை | அறநிலையத் துறையின் வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் - உயரதிகாரிகள் ஆலோசனை

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2001 முதல் நிலுவையில் இருந்து வரும் அறநிலையத்துறை வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மதுரையில் அரசு வழக்கறிஞர்கள்- அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறநிலையத்துறை தொடர்பான வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாதது உட்பட பல்வேறு காரணங்களால் வழக்குகள் முடியாமல் இருந்து வருகிறது. மதுரை கிளையில் 2001 முதல் 1800 வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அறநிலையத்துறை வழக்குகளை விரைவில் முடிக்க ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசு வழக்கறிஞர்கள்- அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை கருப்பாயூரணியில் நேற்று முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதற்கு அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன் தலைமை வகித்தார். அரசு பிளீடர் பி.திலக்குமார், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சுப்புராஜ், கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கண்ணன், அரசு வழக்கறிஞர் எம்.செந்தில் அய்யனார் ஆகியோர் அறநிலையத்துறை வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

கூடுதல் ஆணையாளர் திருமகள், தலைமை இடத்து இணை ஆணையர் ஜெயராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x