Last Updated : 20 May, 2023 06:35 PM

 

Published : 20 May 2023 06:35 PM
Last Updated : 20 May 2023 06:35 PM

“அதிமுக ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் ஹீரோ, இல்லாவிட்டால் ஜீரோ” - வைத்திலிங்கம் பேச்சு

சேலம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

சேலம்: ‘‘அதிமுக ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ, இல்லாவிட்டால் ஜீரோ” என சேலத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் சேலம் மாநகர், மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறதா?. தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் இபிஎஸ் அணிக்கு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு அடுத்த மாதம் வர உள்ளது. அதுவரை கொடியையும், இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதையும் யாராலும் தடுக்க முடியாது.

அதிமுக ஒன்றுபட வேண்டும். அதுதான் எங்களின் எண்ணம். இபிஎஸ்ஸுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை. தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற அதிமுகவை கேடயமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

இபிஎஸ் உடன் உள்ள மாவட்ட செயலாளர்கள் இடையே புரட்சி வெடிக்கப் போகிறது. நிச்சயமாக நாங்கள் ஒன்றிணைவோம். இபிஎஸ் எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம். எங்களுடன் அவர் ஒன்றினையாவிட்டால், கட்சியை விட்டு நீக்கிவிட்டு அதிமுகவை வலுப்படுத்துவோம். சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கூடிய விரைவில் சேலம் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

ஓபிஎஸ் விலகிய பிறகு, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை வல்லவர் என்றும் இவருக்கு வாக்களியுங்கள் என்று இபிஎஸ் பிரச்சாரம் செய்தார். பிறகு தேர்தல் தடைப்பட்டது. டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அரசியலில் பிரிந்து செல்வதும், இணைவதும் சகஜமான ஒன்று. அதுபோல கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இபிஎஸ் இணையாமல் போகலாம். ஆனால், நாங்கள் நினைப்பது இணைய வேண்டும் என்பதுதான். அனைவரையும் ஒன்றிணைத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் இருக்கும். பொதுச் செயலாளர் பதவி இருக்காது. சட்ட விதிப்படி நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். ஓபிஎஸ் சொன்னது போல சசிகலாவை சந்திப்பார்.

சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து மக்களின் நலன் கருதி பதவி குறித்து முடிவெடுப்பார்கள். திருச்சி மாநாட்டில் மூன்று லட்சம் பேரை ஒன்றிணைத்து, தொண்டர்கள் எங்கள் பக்கம் என்று நிரூபித்தோம். தொண்டர்களிடையே கடுமையான எழுச்சி இருந்தது. எடப்பாடியில் கூட்டம் நடத்த சென்றபோது, காவல் துறையினரின் ஆதரவுடன் கொடி கட்டுவதை தடுத்து இருக்கிறார்கள். எங்களை மிரட்டுவது தொடர்ந்தால் இபிஎஸ் எந்தப் பகுதிக்கும் செல்ல முடியாது. அதிமுக ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ, இல்லாவிட்டால் ஜீரோ’ தான் வரும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x