Last Updated : 12 May, 2023 06:06 AM

 

Published : 12 May 2023 06:06 AM
Last Updated : 12 May 2023 06:06 AM

பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காததால் தமிழரசி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஏமாற்றம்

தமிழரசி

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி எம்எல்ஏ தமிழரசிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், கிடைக்காமல் போனதால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் தமிழரசி. கடந்த 2007-ம் ஆண்டில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது, சமயநல்லூர் தொகுதி இல்லாமல் போனது.

அதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில், அவருக்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழரசி வெற்றி பெறவில்லை.

தொடர்ந்து, கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதற்கு, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆதரவாளர்கள் முட்டுக்கட்டையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே.ஆர்.பெரியகருப்பனின் ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி, சீட் வாங்கிய தமிழரசி மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்றார்.

அப்போதே அவருக்கு ஆதிதிராவிடர் நலத் துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதைத் தொடர்ந்து, கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி ஆதரவாளர்கள் இரு கோஷ்டிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், தமிழரசி எதையும் பொருட்படுத்தாமல், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வந்தார். மானாமதுரை தொகுதிகளுக்கான கோரிக்கைகளை சட்டப்பேரவை மட்டுமின்றி, அமைச்சர்கள் பங்கேற்கும் மேடைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. அப்போதும் தமிழரசிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதில் ஏமாற்றமே மிஞ்சியது.

சமீபத்தில், அமைச்சரவையில் மாற்றம் நிகழவிருப்பது உறுதியானது. எனவே, இந்த முறை தமிழரசிக்கு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால், தமிழரசி ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு பதவி கிடைக்காததால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x