Published : 11 May 2023 07:33 PM
Last Updated : 11 May 2023 07:33 PM

அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஏரியில் மண் எடுக்கப்படுவதை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஏரியில் மண் எடுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வத்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், "பொன்னேரி தாலுகாவில் பெருங்காவூர் கிராமத்தில் 375 ஏக்கரில் பரவியுள்ள ஏரி, அதை சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களின் பாசன வசதிக்காகவும் பயன்பட்டு வருகிறது. இந்த ஏரி வழியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் குழாய்களை பதிப்பதற்கு சென்றம்பாக்கத்தை சேர்ந்த ஜிஆர்வி மினரல்ஸ் என்ற நிறுவனத்திற்கு 3 மீட்டர் மட்டுமே மண் எடுக்க குத்தகை உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி 15 மீட்டர் ஆழம் வரை மண் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் ஏரி அழிந்துபோகும் சூழல் உருவாகியுள்ளது.

சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக தாலுகா வாரியான குழுக்களை அமைக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டும், அது போன்ற குழுக்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை. எனவே அனுமதிக்கப்பட்டதை விட சட்டவிரோதமாக பெருங்காவூர் ஏரியில் மண் எடுப்பதை தடுக்க தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x