Published : 08 May 2023 06:06 AM
Last Updated : 08 May 2023 06:06 AM

இன்று தொடங்கவிருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கவிருந்த பொதுமாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வழியாக மே 8-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை நடைபெறும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 3-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் உத்தரவு: இதனிடையே, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதேநேரத்தில், பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

நிர்வாகக் காரணங்களுக்காக... இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தன. தற்போது நிர்வாகக்காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது.

மேலும், கலந்தாய்வுக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தகவலை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x