Published : 07 May 2023 04:43 PM
Last Updated : 07 May 2023 04:43 PM

ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0: 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது - காவல்துறை தகவல்

கஞ்சா | கோப்புப் படம்

சென்னை: ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையின் கடந்த 6 நாட்களில் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 6.12.2021 முதல் 31.12.2022 வரை 3 கட்டங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை போலீஸார் நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்து 723 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழியவில்லை. இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையை போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.

இதன்படி, கஞ்சா பதுக்கல்மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட எஸ்பி.,க்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகவல் கிடைத்தால் 044 28447701 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், tndgpcontrolroom@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு அவர்களுக்குத் தக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையில் கடந்த 6 நாட்களில், 5 பெண்கள் உள்பட 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளின் 41 வங்கி கணக்கு முடக்கப்பட்டு 15 டன் குட்கா மற்றும் 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x