Published : 04 May 2023 01:28 PM
Last Updated : 04 May 2023 01:28 PM

சென்னை - பிஆர்என் கார்டனில் பழுதான வீடுகளில் வசிப்போருக்கு வேறு பகுதியில் புதிய குடியிருப்புகள்: சேகர்பாபு தகவல்

அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

சென்னை: வட சென்னை மேம்பாட்டு திட்டத்துக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24 நிதியாண்டின் அறிவிப்புகளின் பணிகளை செயல்படுத்தும் வகையில் சென்னை, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் புரசைவாக்கம், சேத்துப்பட்டு சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி செய்வது தொடர்பாகவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், "சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டுக்காக 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவளர்ச்சி மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் அவர்களுடைய கோரிக்கைகள் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பணிகள் 3 மாதத்திற்குள் தொடங்கப்படும்.

புதிய குடியிருப்புகள்: சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராட்வே, பி.ஆர்.என். கார்டனில் அமைந்துள்ள 146 குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 86 குடியிருப்புகள் கள ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பி.ஆர்.என். கார்டன் பகுதியில் அமைந்திருக்கின்ற பழுதடைந்த நிலையில் இருக்கும் இக்குடியிருப்பில் வசிக்கின்ற மக்களின் பாதுகாப்புக் கருதி, இக்குடியிருப்பு மக்களை வேறு பகுதிக்கு மாற்றம் செய்து, அப்பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டியமைத்து ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வட சென்னை பகுதியின் மேம்பாட்டு பணிக்கு ரூ.1000 கோடி மூன்றாண்டுகளில் செலவிடப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க இதுபோன்ற இதுவரையில் யாரும் பாராமுகமாக இருந்த உழைக்கின்ற தொழிலாளர்களுடைய உயிர்மூச்சாக, இதுபோன்ற பணிகளை உடல் ஆராக்கியத்தை பேணுகின்ற சமுதாய சீரழவிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு உண்டான விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவது போன்ற அதிமுக்கிய பணிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்பெறுகின்ற வகையில் பணிகளை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இந்தத் திட்டங்களை எடுத்து செயல்படுத்துவது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றது" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x