Published : 03 May 2023 03:04 PM
Last Updated : 03 May 2023 03:04 PM

ஒரு வாரத்தில் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்: மா.சுப்பிரமணியன் தகவல்

செயலி மற்றும் இணையதளத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

சென்னை: கடந்த ஒரு வாரத்தில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் வழிகாட்டுதலின்படி, உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி (TN CONSUMER APP), உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த இணையதளம் இரு மொழி (தமிழ் & ஆங்கிலம்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக்கும் வகையில் ஸ்கிரீன் ரீடர் அணுகல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையைப் பற்றிய அனைத்துத் தகவல்கள் குறிப்பாக அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள், உணவு ஆய்வகங்ளின் முகவரிகள், அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், சுகாதார கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் தடை உத்தரவு, துறை ரீதியான உத்தரவுகள், நீதிமன்ற வழக்குகளின் உத்தரவு ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் பல்வேறு செய்திகள் உள்ளடக்கியிருக்கிறது.

உணவு வணிகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் அதன் விதிகள், விதிமுறைகள் 2011 பற்றிய இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரி முகவரி பற்றிய விவரங்கள் தனிப் பிரிவாக வழங்கப்பட்டுள்ளது உணவுப் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்கள், உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்சிகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் குறித்த தகவல்களை வழங்க இந்த இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய, 9444042322 என்ற வாட்ஸ்அப் புகார் எண் 2017 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் "தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு நுகர்வோர் செயலி" TN Food safety Consumer App என்ற பெயரில் பொதுமக்கள் எளிதாகக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸில்(IOS) பதிவிறக்கம் செய்யலாம். உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் RUCO (பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுபயன்பாடு) / மற்றும் உணவுப் செறிவூட்டல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்விழிப்புணர்வு குறும்படங்களை Facebook, Twitter, Instagram, LINKEDIN, You tube போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.

ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால் அனைத்து வயதினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்பதை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் குறுகிய ஆசையின் காரணமாக வியாபாரிகள் வேகமாக பழுக்க வைத்து இலாபம் ஈட்ட வேண்டும் என்று இந்த தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பலமுறை அறிவுறுத்தலுக்கு பிறகு கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 4122 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.2 லட்சமாகும். இது வருத்தத்திற்குரிய செய்தி என்றாலும் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல் என்பதால் வேறு வழியின்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x