Published : 25 Apr 2023 01:00 PM
Last Updated : 25 Apr 2023 01:00 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிளஸ் 2 தேர்வு | கோப்புப் படம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இப்பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில்,"12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.." இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x