Published : 21 Apr 2023 05:44 PM
Last Updated : 21 Apr 2023 05:44 PM

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: ஹரிபத்மன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

ஹரிபத்மன் | கோப்புப்படம்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவி ஒருவர் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார், பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை, ஏப்ரல் 3ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரிபத்மன் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஹரிபத்மன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கண்டிப்பான ஆசிரியரான என் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர். தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளனர்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x