Published : 20 Apr 2023 06:31 PM
Last Updated : 20 Apr 2023 06:31 PM

2022-ல் மட்டும் 27,140 கிலோ கஞ்சா பறிமுதல்: பேரவையில் இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சட்டப்பேரவையில் பதிலளித்து பேசும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "திமுக ஆட்சியில் 2022-ல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் ஹெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "போதைப்பொருட்களின் பிடியில் இந்த ஆட்சியை விட்டுச்சென்றதே உங்களது ஆட்சியில்தான். இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு, போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க பல தீவிர நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

கடந்த 2020 அதிமுக ஆட்சியில், கோபா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 40,246. ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை பதிவான வழக்குகள் 63,656. அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 37,846, திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,480. அதிமுக ஆட்சியில் 2020ல் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் 1 லட்சத்து 22 ஆயிரம் கிலோ. ஆனால் திமுக ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் 3 லட்சத்து 37,295 கிலோ. 2016 அதிமுக ஆட்சியை எடுத்துக்கொண்டால், 2020 NDPS சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் 5,403. ஆனால் திமுக ஆட்சியில் 2022ல் மட்டும் 10 ஆயிரத்து 391 வழக்குகள் இரட்டிப்பாக வழக்குகள் பதிவு செய்து போதைப்பொருட்கள் ஒழிப்பில் தீவிரம் காட்டப்ப்டடுள்ளது.

2022ல் தான், கடந்த 6 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதுவும் திமுக ஆட்சியில்தான். அதேபோல் இந்த சட்டத்தின்கீழ் 2020 அதிமுக ஆட்சியில் 15 ஆயிரத்து 313 கிலோ கஞ்சாவும், 1 கிலோ 896 கிராம் ஹெராயினும், 527 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2022ல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் ஹெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போதைப்பொருட்கள் விற்பனைச் செய்பவர்கள், விநியோகிப்பவர்களின் 5723 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் நான் மேற்கொள்ளும் கள ஆய்வின்போதும் இந்த நடவடிக்கைகளை நான் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன். காவல் துறையினர் நேர்மையா நடவடிக்கை எடுத்து வருகின்ற நேரத்தில் ஒரு சில கருப்பு ஆடுகள் காவல் துறையில் இருப்பதையும் காவல்துறை அதிகாரிகள் களையெடுத்து வருகின்றனர். போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிட இரவுபகல் பாராமல் காவல்துறையினர் பணியாற்றி வருவது இந்த ஆட்சியில்தான்.

இதைவிட வெட்கக்கேடு என்னவென்றால், அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர், டிஜிபி, ஆணையர் மற்றும் போலீஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள் மீது எல்லாம் சிபிஐ நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் இருந்துள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் அதை மறந்துவிட்டு பேசக்கூடாது.

சமீபத்தில் கூட முன்னாள் காவல்துறை டிஜிபி, ஆணையர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஊடகங்களிலும் இந்த செய்தி வந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில்தான் போதைப்பொருட்களின் மாநிலமாக தமிழகத்தை விட்டுச் சென்றீர்கள். நிதி நெருக்கடியை சீரமைப்பது போல, இந்த நிர்வாகச் சீர்கேட்டையும் சரிசெய்வது எங்களது கடமையாக வந்துள்ளது. போதைப்பொருட்களை நிச்சயமாக அடியோடு ஒழிப்போம். இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்போம்" என்று அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x