Published : 19 Apr 2023 07:10 PM
Last Updated : 19 Apr 2023 07:10 PM

“முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” - மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக பாஜக எதிர்ப்பு

சென்னை: கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கடுமையாக எதிர்த்துள்ள தமிழக பாஜக, “இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறிய பிறகும் கிடைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது உள்நோக்கம் கொண்ட வாக்கு வங்கி அரசியல் என்பதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

திராவிட முன்னேற்ற கழகம் மதவாத தீய சக்தியென்பதை இந்த தீர்மானமானது உறுதி செய்கிறது. இந்து மதத்தில் இருந்த தீண்டாமையினாலேயே சமூக ரீதியாக பட்டியிலின மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) ஆணை 1950-ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தை சார்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது.

அதன் பின் 1956-ம் ஆண்டு, ஹிந்து கலாச்சாரத்தை ஒட்டியே பின்பற்றியே சீக்கிய மற்றும் புத்த மதத்திலும் தீண்டாமை இருப்பதாக குறிப்பிட்ட காக்கா காலேக்கர் ஆணைய பரிந்துரையை ஏற்று சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990-ஆம் ஆண்டு சிறுபான்மை சமுதாய உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால், இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை உள்ளதாகவும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை என்றும் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் கூறி வருகிற நிலையில், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? அப்படியானால் கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொல்.திருமாவளவன் போன்றோர் ஒப்பு கொள்கின்றனரா?

அப்படியானால் எந்த தீண்டாமைக்காக மதம் மாறினார்களோ அதே தீண்டாமை மற்ற மதங்களிலும் உள்ளதால் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் இந்து மதத்திற்கே திரும்புமாறு அவர்களுக்கு அழைப்பு விடுவார்களா? அப்படி இட ஒதுக்கீடு அளிக்கும் நிலையில், பட்டியிலின மக்கள் தொகை அதிகரித்து ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் உருவாகாதா? நீண்ட நாட்களாக அவதியுற்று வரும் பட்டியிலன மக்கள் பெரும் போட்டியை சந்திப்பதன் மூலம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட மாட்டார்களா? நாடு முழுவதும் கடும் பிரச்சினைகள் ஏற்பட்டு பட்டியிலின மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகாதா? பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை சின்னாபின்னமாக்கவே இந்த தீர்மானம் வழிவகை செய்கிறது.

இந்திய தலைமை பதிவாளரின் 2001 அறிக்கையின் படி, கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் ஒரே இனத்தை சார்ந்தவர்கள் அல்ல என்றும் பல்வேறு சாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்ட நிலையில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மக்கள் அனைவரையும் பட்டியலினத்தில் சேர்ப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மக்களை பட்டியிலினத்தில் சேர்ப்பதன் மூலம் கிருஸ்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில், இந்திய நாடு சாதியை திணிப்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நமக்கு எதிரான நாடுகள் முயற்சிக்கும். மேலும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை 2007லேயே அளிக்கப்பட்ட நிலையில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அதன் பின் ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்தும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தாது ஏன்?

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களில் தீண்டாமை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்த மதத்தினரும் ஏற்று கொள்வார்களா? இதுவரை இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை இருந்ததாகக் கூறி இழிவுபடுத்தி வந்தவர்கள் வருத்தம் தெரிவிப்பார்களா? மத்திய அரசு ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளதோடு, நீதியரசர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்து இந்த விவகாரம் குறித்து அறிக்கையை கேட்டிருக்கிறது. கிருஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கு கடந்த இருபது வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில், தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தனி தீர்மானம் மதங்களுக்கிடையே பிளவை உருவாக்கவே வழிவகை செய்யும்.

சாதிகளே இல்லை என்று சொல்கிற மதங்களில், ஓட்டுக்காக சாதிய இட ஒதுக்கீடு கேட்டு மக்களை தூண்டிவிடும் திமுக அரசின் மதவாத போக்கை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்துவ மதங்களில் சாதிய பிளவுகள் உள்ளது என்றும், தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரா? அப்படி உறுதி செய்வாரேயானால் இதுவரை இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கியதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் இந்த தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்'' என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x