Published : 18 Apr 2023 10:11 PM
Last Updated : 18 Apr 2023 10:11 PM

பேனா நினைவு சின்னம் வழக்கு: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை ஒத்திவைப்பு

கோப்புப்படம்

சென்னை: கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை வரும் மே 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் மனுவுக்கு பதிலளிக்க மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்வேறு துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பொதுப்பணித்துறை சார்பாக மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் உள்ளிட்ட பிற துறைகள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை மே23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பேனா நினைவுச் சின்னத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x