Published : 17 Apr 2023 05:34 AM
Last Updated : 17 Apr 2023 05:34 AM

`ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் பொருட்கள் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை - கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பொருட்களை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, பதிவாளர் சண்முக சுந்தரம் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த 2020 அக்.1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டப்படி, பொருட்களைப் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை கைவிரல் ரேகை அங்கீகரித்தல் மூலம் விநியோகிக்க வேண்டும்.

அவ்வாறு விநியோகிக்கப்படும்போது, வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையை வசூலிக்க வேண்டும்.

புலம் பெயர்ந்து வந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலு வலர்கள் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பைக் கண்காணித்து, போதிய அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி, பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டுதிட்டப்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சில ரேஷன் கடை விற்பனையாளர்களை புலம்பெயர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் அணுகும்போது, பல காரணங்களைக் கூறி, பொருட்களை வழங்க மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் மற்றும் பதிவாளரால் தக்க அறிவுரை வழங்கப்பட்ட பின்னரும், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும், அதைக் கண்காணிக்கத் தவறியதையும் இது சுட்டிக் காட்டுகிறது.

எனவே, இந்த அறிவுரைகளை அனைத்து கீழ்நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்து, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்க மறுக்கக் கூடாது என்று பணியாளர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர், ஆய்வு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x