Published : 16 Apr 2023 04:40 AM
Last Updated : 16 Apr 2023 04:40 AM

40 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய தீவிர பணியாற்ற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய தொகுதி பார்வையாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மார்ச் 22-ம் தேதி நடந்தது. இதில், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தொகுதி பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அவர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி, பார்வையாளர்கள் முதல் ஆலோசனைகூட்டம் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கடந்த மார்ச் 31-ம் தேதி காணொலி மூலம் நடந்தது. இந்நிலையில், தொகுதி பார்வையாளர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. காணொலி மூலம் நடந்த இக் கூட்டத்தில் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பணி, உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் தொடர்பான பணிகள் குறித்து ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:

முழு வெற்றிக்கு அடித்தளம்: உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும். கட்சியின் மாவட்ட நிர்வாகிகளைவிட தொகுதிபார்வையாளர்களுக்கு அதிகம் பொறுப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39, புதுச்சேரியில் 1 என 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்.அதுதான் நமது இலக்கு. அதற்கேற்ப தொகுதி பார்வையாளர்கள் விரைந்து பணியாற்ற வேண்டும்.வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். பார்வையாளர்களின் தீவிரமான பணிதான் நாடாளுமன்ற தேர்தலில் நமது முழுமையான வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

‘நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். 2 கோடி உறுப்பினர் என்ற நம் இலக்கை விரைந்து அடைய அவர்களுக்கு ஊக்கமளித்தேன்’ என்று ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதிக்குள் திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x