Published : 14 Apr 2023 02:42 PM
Last Updated : 14 Apr 2023 02:42 PM

வேலூரைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை தமிழக முதல்வரிடம் பெறும் ஐஸ்வர்யா

சென்னை: திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ''தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்காக 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யாவுக்கு வழங்கினார்.

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பி. ஐஸ்வர்யாவின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவருக்கு தமிழக முதல்வர் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் த.ரத்னா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x