Last Updated : 13 Apr, 2023 03:41 PM

 

Published : 13 Apr 2023 03:41 PM
Last Updated : 13 Apr 2023 03:41 PM

“அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு சிதைக்க நினைக்கிறது” - ரவிக்குமார் எம்.பி

புதுச்சேரி: “திமுக தலைமையிலான அணி கடந்த மக்களவைத் தேர்தலில் வென்றதுபோல் வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை மதச்சார்பற்ற கூட்டணி பெறும்” என்று ரவிக்குமார் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.

மின்துறை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, புதுச்சேரி மின்துறை தலித் ஊழியர்கள் நலச்சங்க பலகையை ரவிக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவை ஆளும் மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை தருவதால் பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமூக மக்கள் வேலை வாய்ப்பு பெற முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விழிப்போடு இருந்து வலியுறுத்தினால்தான் அம்பேத்கர் பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்கின்றனர். அம்பேத்கரின் ஆளுமையை எந்த அளவு பலவீனப்படுத்த நினைக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஒருபுறம் மரியாதை செலுத்திவிட்டு, மறுபுறம் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு சிதைக்க நினைக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு அடிப்படையான அரசியலமைப்பு சட்டத்தையே பாஜக ஆட்சியாளர்கள் சீர்குலைக்க முயல்கின்றனர்.

இந்தியாவை காப்பாற்ற, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, "ஜனநாயகம் காப்போம்" என்ற பொருளில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏப்ரல் 14-ம் தேதியான அம்பேத்கர் பிறந்த நாளில் பேரணிகள் நடத்த தீர்மானித்துள்ளோம். ஆளும் பாஜக அரசுக்கு எச்சரிக்கை தருவதாக இருக்கும்.

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க ஆளும் ரங்கசாமி அரசு பாஜகவுக்கு உடன்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் மின்கட்டண உயர்வும், தனியார்மயமாக்கலும் மோடி அரசால் திணிக்கப்படுகிறது. அதானிக்கு லாபம் சேர்க்கவே, நாடு முழுவதும் மின்துறை தனியார்மயமாக்கப்படுகிறது.

திமுக தலைமையிலான அணி கடந்த மக்களவைத் தேர்தலில் வென்றது போல் வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் புதுச்சேரி, தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை மதசார்பற்ற கூட்டணி பெறும்” என்று ரவிக்குமார் எம்.பி. கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x