Published : 10 Apr 2023 03:22 PM
Last Updated : 10 Apr 2023 03:22 PM

மாவட்ட, சிவில் நீதிபதி பதவிக்கான 290 இடங்களை இந்த ஆண்டு நிரப்ப நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

சிவில் நீதிபதி தேர்வு | கோப்புப் படம்

சென்னை: “2023-ம் ஆண்டில் மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள 45 இடங்களையும், சிவில் நீதிபதி பதவியில் உள்ள 245 இடங்களையும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தமிழக அரசின் நீதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முன் இத்தேர்வை உயர் நீதிமன்றமே நடத்தி வந்தது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு போன்றவற்றில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது.

2018-ல் 320 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், 2019-ல் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய நேர்முகத் தேர்வு காரணமாக 56 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான உத்தேச திட்டமிடல் கால அட்டவணையில், '245 சிவில் நீதிபதிகள் காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். ஜூலை மாதம் முதல்கட்ட எழுத்துத் தேர்வுநடத்தப்பட்டு, செப்டம்பரில் முடிவுகள் வெளியிடப்படும். தேர்ச்சிபெற்றவர்களுக்கு பிரதான எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். தொடர்ந்து ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு நடத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வரை சிவில் நீதிபதிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. இதன்படி 2020-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தேர்வு சிவில் நீதிபதி தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதி மற்றும் நிருவாகத் துறை கொள்கைக் விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "2023-ம் ஆண்டில் மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள 45 இடங்களும், சிவில் நீதிபதி பதவியில் உள்ள 245 இடங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x