Published : 08 Apr 2023 07:03 PM
Last Updated : 08 Apr 2023 07:03 PM

இந்தியாவில் 9 ஆண்டுகளில் விமான நிலைய எண்ணிக்கை இரட்டிப்பு: சென்னையில் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு

விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

சென்னை: "இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரதமர் தனது முடிவுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், 200-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்களை கட்ட இருக்கிறோம்" என்று விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

சென்னை பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை நகரில் 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைத்தார். தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.2,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஆகியவற்றுக்கு பக்தர்கள் வசதியாக பயணம் செய்வதை இது உறுதிசெய்யும்.

இந்த விழாவில் கலந்துகொண்ட விமானப் போக்குவரத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியது: “இன்றைய தினம், சென்னையின் வரலாற்றிலும், தென்னிந்தியாவின் வரலாற்றிலும், இந்தியாவின் வரலாற்றிலும் மிக முக்கியமான நாள். ஒரு புதிய வளர்ச்சிக்கான பாதை இன்று திறக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 65 ஆண்டுகள் வரை இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் புதிதாக 74 விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, அந்த எண்ணிக்கை 148 என்று இரட்டிப்பாக்கியிருக்கிறோம்.

இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரதமர் தனது முடிவுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், 200-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபேட் தளங்களை கட்ட இருக்கிறோம். நாட்டின் விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 2013-14 காலக்கட்டம் வரை 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. இன்று விமானங்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் சென்னை. 43 உள்நாட்டு முனையங்களுக்கும், 24 வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து நெரிசலுக்கு சென்னை விமான நிலையமே சாட்சியாக இருந்து வந்தது. சென்னை விமான நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும் என்று எண்ணாமல், உலகிலேயே சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை சென்னை விமான நிலையத்திற்கு ஏற்படுத்தித் தர வேண்டுமென்று பிரதமர் மோடி எண்ணினார்.

இதன் விளைவாக, ரூ.1260 கோடி மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதிய முனையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.3 கோடி என்ற அளவில் இருக்கும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 3 கோடியாக , அதாவது 30 சதவீதம் அதிகரிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 3.50 கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்படும்.

இந்த விமான நிலைய முனையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விமான நிலையமும், இந்தியாவின் நுழைவு வாயில். எனவே, ஒவ்வொரு விமான நிலையத்திலும் இந்தியாவின் கலாச்சார விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்திலும் அதை நீங்கள் காணமுடியும். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள், தஞ்சை ஓவியங்கள், காஞ்சிபுரம் சேலை மற்றும் தமிழகத்தின் 9 வகையான நடனங்களும் காட்சிப்படுத்ப்பட்டுள்ளன" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x