Published : 08 Apr 2023 05:48 PM
Last Updated : 08 Apr 2023 05:48 PM

“தமிழக மக்கள் மீது மிகுந்த ஈர்ப்பு... தமிழ் மொழியை நேசிக்கிறேன்!” - சென்னை நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு

ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி

சென்னை: "இது இந்தியாவின் நூற்றாண்டு என்று பல நிபுணர்கள் கூறி வருகின்றனர். மிக முக்கியமாக இங்குள்ள ஒவ்வொரு இந்தியரும் இது நமக்கான நேரம் என்பதை உணர்ந்து வருகின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது" என்று சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சென்னை - மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “ராமகிருஷ்ண மடத்தை நான் எப்போதும் உளப்பூர்வமாக மதிப்பேன். இந்த மடம் என் வாழ்வில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

எனக்கு தமிழக மக்கள் மீது மிகுந்த ஈர்ப்பு இருக்கிறது. நான் தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கிறேன். சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் வாய்ப்பு எனக்கு இன்று கிடைத்துள்ளது. மேற்கில் இருந்து திரும்பிய சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கியிருக்கிறார். இங்கு தங்கிய அவர் தியானத்திலும் ஈடுபட்டிருக்கிறார். அவை எனக்கு எப்போதும் ஊக்கமளிப்பவை.

தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ராமகிருஷ்ண மடம் செயல்பட்டு வருகிறது. கல்வி, நூலகங்கள், தொழுநோய் விழிப்புணர்வு, மருத்துவம், ஆன்மிகம், உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். கன்னியாகுமரியில் உள்ள பாறையில்தான் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக்கான நோக்கத்தை கண்டறிந்தார். இந்த மாற்றத்தின் தாக்கத்தைத்தான் அவர் சிகாகோவில் உணர்ந்தார். வங்கத்தில் இருந்து வந்த சுவாமி விவேகானந்தரை தமிழ்நாடு நாயகராக வரவேற்று கொண்டாடியது.

இது இந்தியாவின் நூற்றாண்டு என்று பல நிபுணர்கள் கூறி வருகின்றனர். மிக முக்கியமாக இங்குள்ள ஒவ்வொரு இந்தியனும் இது நமக்கான நேரம் என்பதை உணர்ந்து வருகின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், விளையாட்டு, பாதுகாப்பு, உயர் கல்வி, உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் உள்ள தடைகளை உடைத்து பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். வளர்ச்சியடைந்த இந்தியா, காலனியாதிக்க சிந்தனையிலிருந்து விடுதலை, பாரம்பரியங்களைக் கொண்டாடுதல், ஒற்றுமையை பலப்படுத்துதல மற்றும் நமது கடமைகளை நோக்கி பயணித்தல் என்ற அந்த கொள்கைகளின் அடிப்படையில்தான், அமிர்த காலத்தை அடைவதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது" என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமருக்கு விவேகானந்தரின் முழு உருவச் சிலையை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் பரிசாக அளித்தனர். முன்னதாக, விவேகானந்தர் இல்லத்திற்கு சென்றவுடன், அங்கு வைக்கப்பட்டு இருந்த விவேகானந்தர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். | வாசிக்க > சென்னை - கோவை 'வந்தே பாரத்' ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x