Published : 08 Apr 2023 07:17 AM
Last Updated : 08 Apr 2023 07:17 AM

இலங்கை தொன்ட்ரா விரிகுடாவில் சீனாவின் ரேடார் தளம் - இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பதற்றம்

இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதி.

ராமேசுவரம்: இலங்கையின் ஹம்பாந் தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ கடந்த 2022 ஆகஸ்டில் நங்கூரமிட்டது.

இந்த சீன உளவு கப்பலின் வருகை, இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கவலையும் ஆட்சேபமும் தெரிவித்தது. எனினும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் தொடர்ந்து ஒரு வார காலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு, தனது பணியை முடித்துவிட்டே திரும்பிச் சென்றது.

இந்நிலையில் இலங்கையில் சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகேயுள்ள இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில் சீனா தனது அறிவியல் அகாடமி விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் மூலம் ரேடார் தளம் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு மிக அண்மையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களிலிருந்து இயங்கும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படைகளின் ரோந்து கப்பல்கள், படகுகளின் இயக்கத்தை சீன ரேடார் தளத்தால் துல்லியமாக கண்காணிக்க முடியும். அது போல இந்திய பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களையும் அவற்றால் கண்காணிக்க முடியும்.

மேலும் இந்தியப் பெருங்கடலில் தொன்ட்ராவிலிருந்து, தென் மேற்கே 2,500 மைல் தொலைவில் அமைந்துள்ள பிரிட்டனுக்குச் சொந்தமான ‘டியாகோ கார்சியா' தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும் உளவு பார்க்க முடியும் எனவும், இந்திய பெருங்கடலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கவும் முடியும் எனவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா உள்ளது. அதுபோல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடன் வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவு பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது.

இந்தப் பின்னணியில், தொன்ட்ரா விரிகுடாவில் சீனாவுக்கு ரேடார் தளம் அமைக்க அனுமதி வழங்கினால் இந்திய-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படுத்துடன் இந்திய பெருங்கடல் பிராந்தியத் தில் பெரும் பதற்றம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x