Last Updated : 06 Apr, 2023 05:08 PM

 

Published : 06 Apr 2023 05:08 PM
Last Updated : 06 Apr 2023 05:08 PM

தாய் - தமிழகம், தந்தை - இலங்கை அகதி... இளைஞருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: இலங்கை தமிழருக்கும், இந்தியப் பெண்ணுக்கும் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் சகாயநாதன். இவர் இந்தியாவுக்கு 1990-ல் அகதியாக வந்தார். சிவகங்கை நாட்டரசன்கோட்டை அகதிகள் முகாமில் தங்கினார். இவர் சிவகங்கையை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மேரி கிறிஸ்டியானாவை காதலித்து 23.5.2001-ல் சிவகங்கை அலங்கார அன்னை ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் நியாசியஸ். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார்.

அவரது பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அது தொடர்பாக விளக்கம் கேட்டு பாஸ்போர்ட் அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி நியாசியஸ் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: "மனுதாரர் 18.1.2002-ல் பிறந்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் 1987 ஜூலை 1க்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இந்திய குடிமகன், குடிமகள் தான். குடியுரிமை சட்டத் திருத்தம் 3.12.2004-ல் தான் அமலுக்கு வந்துள்ளது. மனுதாரருக்கு இரு வழிகள் உள்ளன.

அவரது தாயார் இந்திய குடியுரிமை பெற்றவர். மனுதாரர் கட்-ஆப் தேதிக்கு முன்பு பிறந்துள்ளார். இதனால் குடியுரிமை சட்டத்தின் முக்கிய அம்சத்தை நிறைவேற்றியுள்ளார். பிறப்புச் சான்றிதழில் இலங்கை அகதி என்றிருப்பது மனுதாரரின் தவறு இல்லை. அதிகாரிகள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். எனவே மனுதாரருக்கு 3 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்" என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x