Published : 06 Apr 2023 03:16 PM
Last Updated : 06 Apr 2023 03:16 PM

“கலாஷேத்ரா விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்” - நடிகை அபிராமி

நடிகை அபிராமி | கோப்புப்படம்

சென்னை: "கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை" என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.

சென்னையில் நடிகை அபிராமி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நான் கலாஷேத்ராவில் படித்திருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து முதலில் நான் பேசியபோது, விளம்பரத்துக்காக பேசுவதாக கூறினார்கள். இதன்மூலம் விளம்பரம் கிடைத்து எனக்கு ஒன்று கிடைக்கப்போவது இல்லை. வேண்டுமென்றால், இதுபோன்ற விவகாரத்தில் தலையிடாமல், நான் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் கலாஷேத்ரா குறித்து தொடர்ச்சியாக அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்தது வெகுவாக என்னை பாதித்தது.

அந்தக் கல்லூரிக்காக குரல் கொடுக்க வேண்டியது, அங்கு படித்த ஒவ்வொரு மாணவியின் பொறுப்பு என்று உணர்ந்ததால், நான் கலாஷேத்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். அதற்காகத்தான் நான் இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தேன். ஒரு கல்லூரியின் மீது குற்றம்சாட்டப்பட்டால், அங்கு படிக்கும் மாணவர்களை நேரடியாக பேசவிட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் மாணவிகள் தவறாக தூண்டிவிடப்படுகிறார்கள்.

நான் படிக்கின்ற காலத்திலேயே ஒரு ஆசிரியை, ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக பேசும்படி என்னை வற்புறுத்தினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்தக் கல்லூரியில், நான் 2010 முதல் 2015 வரை படித்த மாணவிதான். 10 ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுவதால்தான், நான் இந்த விவகாரம் குறித்து பேச வந்தேன்.

2012-13 காலக்கட்டத்தில் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது, போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கினார்கள். தற்போதும் அதேபோலத்தான் ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். இத்தனை நாட்களாக எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவிகளை தூண்டிவிட்டு இந்த விவகாரத்தை பெரிதாக்கிவிட்டனர்.

அந்தக் கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை. எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நான் நேரடியாக அமர்ந்து பேசி என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன். ஒருவர் மீது எளிதாக குற்றம்சாட்டிவிடலாம். என்னைப் பொறுத்தவரை, சில ஆசிரியைகள் இந்த விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரிபத்மன்,உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், கல்லூரி வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ‘2015-முதல் 2019-ம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x