Published : 06 Apr 2023 03:10 PM
Last Updated : 06 Apr 2023 03:10 PM

கிண்டியில் ரூ.175 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம், துபாயில் புத்தொழில் மையம்: அரசின் புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: துபாயில் புத்தொழில் மையம் அமைக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.6) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளிகொளத்தூரில், 28 ஏக்கரில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று சிட்கோ மூலம் அமைக்கப்படும்.

கிண்டியில் ரூ.175 கோடியில் தொழில்முனைவோருக்கு பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும். இதன்மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுத்தொழில் முனைவோரின் தேவையை பூர்த்தி செய்து வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடிய வகையில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்.

புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 6200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க திட்ட உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மாநில அரசு பங்களிப்புடன் ரூ.3 கோடியில் விசைத்தறி குழுமம் அமைக்கப்படும். கோவையில் மாநில அரசு பங்களிப்புடன் ரூ.7.33 கோடியில் பாக்கு மட்டை குழுமம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் ரூ.1 கோடியில் தேன் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.

மகளிர் தொழில் முனைவோர்கள் பயன் பெறும் வகையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ரூ.1.15 கோடியில் மகளிர் எம்ராய்டரிங் குழுமம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், கரசமங்கலத்தில் ரூ.3.39 கோடியில் மண்பாண்ட குழுமம் அமைக்கப்படும்.

கோவையில் ரூ.4 கோடியில் தென் நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் மையம் அமைக்கப்படும்.

ரூ.16 லட்சத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 1 லட்சம் தென்னை நார் வளர்ப்பு பைகள் பயன்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x