Published : 05 Apr 2023 05:10 AM
Last Updated : 05 Apr 2023 05:10 AM

சொந்த காரணங்களுக்காக வாய்ப்பை வீணடிக்கக் கூடாது: மருத்துவ மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை

சென்னை: முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையை சொந்த காரணங்களுக்காக வீணடிக்கக் கூடாது என மருத்துவ மாணவர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவரான ஆஷ்ரிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்படி மருத்துவக் கல்லூரியில் உரிய கட்டணங்களையும், அசல் சான்றிதழ்களையும் ஒப்படைத்து கடந்த 2019 மே 1-ம் தேதி சேர்ந்த மருத்துவர் ஆஷ்ரிதா, இரண்டே நாட்களில் மே 3-ம் தேதி தனது திருமணத்தைக் காரணம் காட்டி அந்த மருத்துவ மேற்படிப்பைத் தொடர விருப்பம் இல்லை எனக்கூறி அசல் சான்றிதழ்களை கோரியுள்ளார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் ரூ. 15 லட்சத்தை செலுத்தி அசல் சான்றிதழ்களை பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் ஆஷ்ரிதா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து, அந்த மாணவியின் அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மருத்துவக் கல்லூரி தேர்வுக்குழு மற்றும் கல்லூரி முதல்வர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், விதிகளின்படி அவர் ரூ. 15 லட்சத்தை செலுத்தினால் மட்டுமே அவருக்கு அசல் சான்றிதழ்களை வழங்க முடியும், என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் வழக்கறிஞர் என்.சினேகாவும், பெண் மருத்துவர் தரப்பில் வழக்கறிஞர் சுதர்ஷனா சுந்தரும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே இந்த மாணவி அந்த படிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

அதேநேரம் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை என்பது தேசிய வளம் என்பதையும், நூலிழையில் இந்த வாய்ப்பைத் தவற விடும் மாணவர்களும் உள்ளனர் என்பதையும் மருத்துவ மாணவர்கள் உணர்ந்து தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக இந்த இடங்களை வீணடிக்கக் கூடாது. குறிப்பாக தங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை திட்டமிடுவதில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

எனவே ரூ. 15 லட்சம் செலுத்தினால் மட்டுமே அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க முடியும் என்ற கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவு ஏற்புடையதல்ல என்பதால் இந்தவழக்கை தள்ளுபடி செய்கிறோம். பெண் மருத்துவரின் அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் இரு வாரங்களில் ஒப்படைக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x