Published : 04 Apr 2023 06:32 AM
Last Updated : 04 Apr 2023 06:32 AM

போதையில்லா தமிழகம் என பேசிவிட்டு கல்லூரி அருகே மதுக்கடை திறந்தால் எப்படி?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என பேசிவிட்டு, கல்லூரி அருகே மதுக்கடை திறந்தால் எப்படி? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நற்பவளக்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நற்பவளக்குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடையை தற்போது கல்வி நிலையங்கள் அருகே மாற்றியுள்ளனர். இதனால், மது அருந்திவிட்டு கல்வி நிலையங்களில் மதுபாட்டில்களை வீசி செல்வதால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கல்வி நிறுவனம் அருகே மதுக்கடை திறக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், ‘அந்த கல்வி நிறுவனம் தற்போது செயல்படாமல் உள்ளது’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘கல்வி நிறுவனம் அருகே மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்பது ஆட்சியருக்கு தெரியாதா? பள்ளி, கல்லூரி அருகே மதுக்கடை திறந்தால் மாணவர்கள் எவ்வாறு கெட்டுப்போகாமல் இருப்பார்கள்?

போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என பேசிவிட்டு, கல்லூரி அருகே மதுக் கடைகளை திறப்பதால் சமூகம் கெட்டுப்போகிறது’ என வேதனை தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மது விற்பனையில் ஈடுபடுவது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால் அதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது. இந்த இடத்தில் மதுக்கடை செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

மதுக்கடை அமைந்துள்ள இடத்தில் உள்ள கல்வி நிறுவனம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? அங்கு பள்ளி, கல்லூரி, கோயில்கள் உள்ளனவா என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x