Published : 04 Apr 2023 06:06 AM
Last Updated : 04 Apr 2023 06:06 AM

கஞ்சித்தொட்டி திறந்து உதகையில் தோட்டக்கலை ஊழியர்கள் போராட்டம்

பிரதிநிதித்துவப் படம்

உதகை: தோட்டக்கலைத் துறையில் பணிபுரியும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும், பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும், தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பூங்கா, பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினசரி ரூ.400-ஆக உள்ள ஊதியத்தை ரூ.700-ஆக உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ம் தேதி முதல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மரத்துக்கு மனு கொடுப்பது, தாவரவியல் பூங்கா குட்டையில் இறங்குவது, பிச்சை எடுப்பது உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால், தாவரவியல் பூங்காவில் நேற்று கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சி காய்ச்சி ஊழியர்களுக்கு விநியோகித்தனர். தோட்டக்கலை ஊழியர்களின் போராட்டத்தால், கோடை சீசன் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x