Published : 30 Mar 2023 11:52 AM
Last Updated : 30 Mar 2023 11:52 AM

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா | தமிழக அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. இந்நிலையில், இப்பிரச்சனைக்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும். இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதில் பெரியார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று (மார்ச் 30 ) கொண்டாடப்படுகிறது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. வரலாற்றின் முக்கியமான நாள்.

இந்தியாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது.

வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன். வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும்" என்று கூறினார். மேலும், கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் பினராய் விஜயனுடன் பங்கேற்கச் செல்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x